இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள்
மிகவும் குழம்பியிருக்கிறார்கள். பலதரப்பட்ட கருத்துகள், முடிவு எடுக்கத் தெரியாத ஒரு
நிலை. இவை எல்லாம் குழப்பத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது,
எப்படி அணுகுவது, யாருடைய கருத்தை நாடுவது என்று தடுமாற்றம். கடைசியில் எதையோ தேர்ந்தெடுத்து
வேறு வழியில்லாமல் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
கலாசாரம் என்ற பெயரில் சிறு வயதிலிருந்தே அவர்களை முடிவு எடுக்க விடுவதேயில்லை. ஒரு
மாணவன் சார்பில் எப்பொழுதும் முடிவுகளை எடுப்பது தாய், தந்தையர் (அ) ஆசிரியர்கள் (அ)
குடும்பத்திற்குத் தெரிந்த ஓர் அனுபவஸ்தர். சுயமாகத் தனக்கு என்ன வேண்டுமென்று முடிவு
எடுக்கத் தெரியாததாலேயே குழப்பம் மென்மேலும் மேலோங்கி நிற்கிறது.
ஒரு காலகட்டத்தில் அரசு வேலை (அ) வங்கி வேலையே சிறந்தது என்று கருதப்பட்டது. அதற்குக் காரணம் ஒருமுறை வேலையில் சேர்ந்தால் ஓய்வு பெறும்வரை பிரச்சினைகள் கிடையாது. திருமணத்துக்குக் கூட இது ஒரு முக்கியமான தகுதியாக இருந்தது. மேலும் சொந்தத் தொழில் செய்தவர்கள் எல்லோரும் ஒரு பின்னணியை நம்பி வாழ்ந்தவர்கள். வாய்ப்புகள் இருந்தன. ஆனால் குறைவு.
இன்றைக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகம். ஏராளமான துறைகள். எவ்வளவு துறைகள் இருந்தாலும் ஒரு நிறுவனத்துக்குத் தூண் போல் நிற்பது மார்கெட்டிங் துறையே. இத் துறை இல்லாத நிறுவனமே கிடையாது.
மார்க்கெட்டிங் என்பது வெறும் பொருள்களை விற்பது மட்டுமல்ல. அது ஒரு
Behavior. மனிதர்களை உறவு வகையில் பொருள்களுடன் இணைக்கிறது. நாம் பிறந்த நிமிஷத்திலிருந்து நாம் நம்மை மார்க்கெட் செய்து கொண்டுதான் இருக்கிறோம். எல்லா காலகட்டத்திலேயும் நம்மை மார்க்கெட் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பொருளை நாம் நம்முடன் சேர்ந்து மார்க்கெட் செய்யும்பொழுது அது மேம்பட்டு நிற்கிறது.