amutha malai polikirathu

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

யாழ்குடாநாட்டின் உச்சியில் சூடிய சூழாமணியென இத்தனை திருக்களும் நிறைந்த வல்வெட்டித்துறைக் கடற்கரையில் 27.02.1937ம் தினம் அன்னபூரணி தன் கடல் பயணத்தைத் தொடங்கக் காத்து நிற்கிறாள். திரை கடலோடித் திரவியம் தேடு என்பதே வழக்கம். ஆனால் இங்கே இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கப்பல்கள் திரவியத்தை மட்டுமே தேடிப்போவதில்லை. மன்னுயிர் காக்கும் அன்னத்தை யும் தேடித் திரட்டி வந்து அரிசி மூடைகளாக இறக்கும். ஆதலால்தானோ இதற்கு அன்னபூரணி எனப் பெயர்சூட்டி உள்ளனர் எனப் பலரும் வியக்க நின்ற நாவாய் கடலைக் கிழித்து மேற்திசை நோக்கிப்போக நகர்ந்தது.

மேற்திசை நோக்கிய பயணம்:- கண்ணுக்கு எட்டும் மட்டும் அன்னபூரணியின் கடற்பயணத்தை கவனித்தவர்கள் பார்வையில் இருந்து படிப்படியாக மறைந்ததும் அதில் செல்லும் கடலோடிகளின் மனைவி மக்கள் மனதில் நாளுக்கு நாள் துயரம் நிறைகின்றது. விழிநீர் வெள்ளம் வற்றாத வாய்க்காலாக மாறுகின்றது. எண்ணத் திரையிலிருந்து மங்கிப்போன அன்னபூரணி அமெரிக்க கனேடிய வடகிழக்கு எல்லைக்கு சொற்ப தொலைவிலுள்ள குளோசெஸ்டர் (Gloucester) துறை முகத்துள் நுழைந்து நங்கூரமிட்டு தனது பயணத்தை முடித்த பெருமிதத்துடன் நிற்கின்றது. இலங்கையிலிருந்து அன்னபூரணி அம்மாள் என்ற செய்தி மசாசுசெற்ஸ் (Massachusetts) மாநிலத்தில் பத்திரிகைச் செய்தியாக வருகின்றது. கப்பலை செலுத்தி வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்ததினம் 1.08.1938 எனக்குறித்துக் கொள்கிறார்கள். தமது கடற்பயணத்தை ஒன்றரை வருடப் பயணம், 18 மாதம், 72 வாரம், 540 நாட்களாகிவிட்டன என நினைத்தாலும் தமக்கு அபயம் தந்த வல்வெட்டித்துறைத் தெய்வமே என தம் சிரம் தாழ்த்திக் கரங்கூப்பி வணங்குகின்றனர்.

இது ஓர் பூர்வசென்ம பந்தம்
:- அன்னபூரணிப் பாய்க்கப்பல் இற்றைக்கு எழுபத்தைந்து வருடங்க ளுக்கு முன்பு நுழைந்த துறைமுகம் உள்ள மாநிலத்திற்கும் (மசாசுசெட்ஸ்) ஈழத்தமிழருக்கும் அதன்பின்னர் 1980களில் இருந்த தொடர்புகளையும் நாமும், உலகும் அறியும். நிறத்தால், குலத்தால், மொழியால் சமயத்தால் முற்றிலும் வேறுபட்டவர்கள் வாழும் மாநில அரசவையில் ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை அறிந்து சுதந்திரத்தை இழந்த மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி தமிழர் கூட்டணித் தலைவர் அண்ணன் சிவசிதம்பரம் அவர்களை வரவழைத்து அடையாளமாக அதன் தீர்மான திறப்பை வழங்கினார்கள். அதன்பின்னர் தான் உலகநாடுகள் இமைகளை இடுக்கியாவது ஈழத்தைப் பார்க்க ஆரம்பித்தன. இந்தப் பரிவுக் கும் அன்னபூரணி அந்த மாநிலத்தே நுழைந்த முன்நிகழ்வுக்கும் இடையில் ஏதோ ஓர் பூர்வசென்ம பந்தம் உள்ளதோ எனத் தோன்றுகின்றது.

அன்னபூரணியின் மேற்கத்திய பயணம் :- 'இன்றிலிருந்து அரை நூற்றாண்டுக்குள், நான் பிறந்து வளர்ந்த நாட்டில் வாழ் ஈழத்தமிழர்களுக்கு பெரும்பான்மை இனத்தவரால் பெரும் துன்பம் ஏற்பட இருக்கிறது. அப்போது நீவிர்தான் அவர்களுக்குப் புகலிடம் தரவேண்டும்". என்ற வேண்டுகோளை முன்பாகவே உன்னிடம் சமர்ப்பிக்க வந்துள்ளேன் என்பது போலவே அன்று தனது பாய்களை இறக்கிவைத்து வணக்கம் செய்தாளோ வேம்புடல் கொண்ட அன்னபூரணி அன்னை என்று கற்பனை செய்தாலும் அது முற்றுப்பெற்ற உண்மை என்பதை இன்று உணர்கின்றோம். பிறந்த கத்திற்கு புகழ் தேடித்தந்த அன்னபூரணி முழுத்தமிழினத்திற்கும்; இலங்கைக்கும் புகழ் தேடித்தந்த தமிழர்தம் கடலாளுமையை விளக்கும் அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வந்துள்ளாள். அன்னபூரணி குளோசெஸ்டர் துறைமுகத்தில் நுழைந்ததும் அந்த நிகழ்வு மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பொஸ்டன் குளோப் என்னும் நாளிதழ் 1938ம் ஆண்டு 8ம் மாதம் 2ம் தினத்தன்று (அப்போது அதன்விலை 2 சதம்கள்) வெளியிட்ட செய்தியின் தலைப்பு: பிறிகன்ரைன் முடித்த கடல் பயணம் இலங்கையில் இருந்து வந்த அற்புதமான நிகழ்ச்சி கடல் பயணத்தைப் பற்றிய அரிய தகவல்கள். எழுதுவது: நாற் ஏ.வறோஸ்.

89அடி நீளமான புளோரன்ஸ் சி றொபின்சன் என்னும் பிறிகன்ரைன் ரக (அன்னபூரணியின் புதிய பெயர்) பாய்கப்பல் ஒன்று குளொசெஸ்டர் துறைமுகத்தை அண்மித்து நங்கூரம் இட்டு உள்ளது.

  • அன்னபூரணி பாய்க்கப்பலின் நிழற்படத்துடனான வருகை பற்றிய செய்தி
  • அன்னபூரணிப்பாய்க்கப்பல் யாருக்காகயாரால் வல்வெட்டித்துறையிலிருந்து தருவிக்கப்பட்டதோ அவரது வரலாறு.
  • அன்னபூரணியை இந்து சமுத்திரம், அத்திலாந்திக் சமுத்திரம் ஆகிய இரு சமுத்திரங்களுடா கவும், அவற்றுக்கு இடைப்பட்ட வங்கக்கடல், அரபுக்கடல், செங்கடல், மத்தியதரைக்கடல், பேர்மி யூடாக்கடல், ஆகிய கடல்களுக்கூடாகவும் செலுத்திவந்த திறனும், விறலும் மிக்கவல்வெட்டித் துறைக் கப்பலோட்டிகள் பற்றியது.
பாய்களின் உதவியுடன் மட்டும் மேற்குச் சமுத்திரங்களில் பயணித்த கடைசி மொத்தகாற்று வழிக் கலம் இதுவேஎனலாம். சூறாவளிகள், புயல்கள், தாகம், உணவுப் பற்றாக்குறை என்பவற் றின் மத்தியில், சிதைந்து போகத்தக்க பல அபாய நிலைகளைக் கடந்துவந்த இந்தக் கப்பலின் மேற்தளத்தில், அந்த மதியவேளையில் ஒரு முதிய குளொசெஸ்டர் வாசி, தலைப்பாகை, வேட்டி அணிந்த இலங்கையரான ஐந்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இந்துக்கடலோடிகள் கனகரெத் தினம்.தம்பிப்பிள்ளை, அகவை48, தண்டையல் சின்னத்தம்பி.சிதம்பரப்பிள்ளை, அகவை28. தாமோ திரம்பிள்ளை.சபாரெத்தினம், அகவை28. பூரணவேலுப்பிள்ளை.சுப்பிரமணியம், அகவை29, ஐயாத் துரை.இரத்தினசாமி, அகவை24. என்பவர் என பலசெய்திகளை அந்தப்பத்திரிகை வெளியிட்டிருந் தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி ஆங்கிலேயரிடம் இருந்து சுதேச கப்பல் வணிகத்தை ஆரம்பித்த சம காலத்தில் வல்வெட்டித்துறையில் கட்டிய அன்னபூரணியை அமெரிக்கர் ஒருவர் கொள்வனவு செய்ததையும், அதைத் தனது நாட்டிற்குக் கொண்டு சென்றதையும் ஒப்பிட்டுப் பார்த் தால் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் மிகமிகக் கெட்டிக்காரர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

சாகரம் கடல்கடந்தாய் - வாழி அன்னபூரணி
உசாத்துணை நூல்கள்:-
  1. ஈழத்துப் பூராடனாரின் 'வல்வெட்டித்துறைக் கடலோடிகள்"
  2. 'வல்வெட்டித்துறையின் வரலாறு" வித்துவான் வ.மு.கனகசுந்தரம்.
  3. 'வல்வெட்டித்துறை ஊரின்னிசை" திரு.பூ.க.முத்துக்குமாரசாமி, திரு.செ.வைத்தியலிங்கம்பிள்ளை.
  4. 'வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டியதமிழர்கள்" திரு.நு.மு.இராஜகோபால்.
  5. 1974 தமிழாராய்ச்சி மாநாடு அன்னபூரணி ஊர்தி பவனி விசேட மலர்.
  6. 'வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்" வல்வை ந.நகுலசிகாமணி. 2ம் பதிப்பு 2006.
  7. 'வரலாற்றில் வல்வெட்டித்துறை" திரு.பா.மீனாட்சிசுந்தரம், திரு.ந.சீவரத்தினம்.
  8. 'Daily Times" August 2nd 1938.
  9. Reopening of a North Ceylon port, page 8 to 20
From www.vvthistory.com

பின்பற்றுபவர்கள்